சினிமா செய்திகள்






அதிரடியான அரசியல் 'சுறா'
அதிரடியாக அரசியலில் குதிக்கவுள்ளார் நடிகர் விஜய். அதற்கான ஆரம்பம் ஏற்கனவே நடந்தேறினாலும், இன்னும் தீவிரமாக இறங்கவுள்ளார். அதற்காக ஒவ்வொரு மாவட்ட நிர்வாகிகளிடமும் அடிக்கடி நேரிலும், ஃபோனிலும் பேசி வருகிறார். 
விரைவில் வெளியாக இருக்கும் சுறா படம் வழக்கமாக நடைபெறும் வெளியீட்டு நிகழ்ச்சியாக இல்லாமல், அரசியல் கட்சியின் ஆரம்ப விழா போல மிரட்ட வேண்டுமென உத்தரவு போட்டிருக்கிறார் விஜய். 
சுறா கிட்டத்தட்ட 500 பிரிண்ட்டுகளுக்கு மேல் போடப்பட்டு ரசிகர்கள் மட்டுமல்லாமல் பொதுமக்களையும் அதிக அளவு படம் பார்க்க வைக்கப் போகிறார்கள். காரணம் சுறாவில் சில காட்சிகள் அரசியல் வாசம் வீசுகிறதாம்.



'அங்காடித் தெரு’ - மந்தைகளும்,வதைக்கூடங்களும்


கைப்பிடி உப்பு,கைக்குள் அடங்கும் தீப்பெட்டி இவற்றுக்குப் பின்னாலுள்ள கண்ணீர்க்கதைகள், உழைப்புச் சுரண்டல்கள்,மனிதப் பாடுகள் இவையெல்லாம் பொதுவாக நம் கவனத்துக்கு அதிகம் வருவதே இல்லை.செய்தித்தாள்களில் எப்போதாவது அவை பற்றிய அதிர்ச்சித் தகவல்களைக் காண நேரும்போது மட்டும் ஒரு உச்சுக் கொட்டலோடு...கணநேர அனுதாபத்தை நம் பங்குக்குக் காணிக்கையாக்கியபடி அடுத்த நொடியே அதிலிருந்து நம் கவனத்தை மிகுந்த அவசரத்தோடு மீட்டுக் கொண்டு விடுகிறோம்.குறிப்பிட்ட அந்தக் களங்களின் உழைப்பாளிகள் படும் அவத்தைகளை ஓரளவு அறிந்திருந்தாலும் விரிவான பின்புலத்தோடும்,தகிக்கும் நிஜங்களோடும்- மெய்யான கள ஆய்வில் கிட்டிய தகவல்களோடும் திருமதி ராஜம் கிருஷ்ணன் அவற்றை நாவலாக்கியபோது('கரிப்பு மணிகள்','கூட்டுக் குஞ்சுகள்') மனம் கனத்துப் போய்....மலிவான அந்தப் பொருட்களை  சரளமாக..சகஜமாகப் பயன்படுத்தக் கூட இயலாத கூச்சம் கலந்த ஒரு குற்ற உணர்வு நெடுநாள் இருந்து கொண்டிருந்தது.
திரு ஜெயமோகனின் ‘ஏழாம் உலகம்’நாவல் பிச்சைக்காரர்களின் குரூர வாழ்வியல் அவலங்களைத் தோலுரித்துக் காட்டியபோது - வழக்கமாக முன்பெல்லாம் செய்ததுபோல் சில சில்லறைக் காசுகளை மட்டும் வீசிவிட்டு அவர்களைக் கடந்து சென்றுவிடுவதென்பது இயலாமல் போயிற்று

வசந்தபாலனின் இயக்கத்திலும், ஜெயமோகனின் உரையாடல் நயத்துடனும் அண்மையில் வெளிவந்திருக்கும் திரைப்படமான 
‘அங்காடித் தெரு’ பெருநகரங்களில் மட்டுமன்றிச் சிறு நகரங்களிலும் தற்போது வானுயர வளர்ந்து நிற்கும் பல்பொருள் அங்காடிகளைச் சற்றும் தயவு தாட்சணியமின்றிப் புறக்கணிக்கத் தூண்டும் உக்கிரமானதொரு மனநிலையை மனதிற்குள் அழுத்தமாகப் பதித்து விட்டிருக்கிறது.

‘திருமணத்துக்கு நாள் மட்டும் குறித்து விட்டுக் குறிப்பிட்ட கடைக்குள் நுழைந்தால் போதும்,திருமணத்தை முடித்து..சீர் செனத்தி செய்து தனிக்குடித்தனம் வைக்கும் வரை உள்ள எல்லாப் பொருட்களையும் வேறெங்கும் அலையத் தேவை இல்லாதபடி அந்த ஒரே இடத்தில் அள்ளிக் கொண்டு வந்து விடலாம்’
என்ற கவர்ச்சியான விளம்பரத் தூண்டிலுக்கு ஆளாகும் மக்கள்  பேரங்காடிகளில் மந்தையாய்க் குவிகிறார்கள்...குவிகிறார்கள்.....குவிந்து கொண்டே இருக்கிறார்கள். 
அது, முதல் குவியல்.....

பணத்தை மூட்டை கட்டி வைத்துக்கொண்டு நுகர்ச்சிக்கான பொருளை வாரிக் கொள்ளத் துடிக்கும்  அந்தக் கும்பலின் தேவைக்கேற்ற தீனி  சரக்கறையில் குவியல் குவியலாகக் கிடக்கிறது.
அது, இரண்டாம் குவியல்.

வாங்கும் கூட்டத்தின் ரசனையறிந்து தேவை உணர்ந்து சரக்குக் குவியலைத் தரம் பிரித்துக் கொடுக்க இன்னுமொரு கும்பல் தேவைப்படுகிறது. நிலம் வறண்டதால் வாழ்க்கை வறண்டு போனவர்களாய்ப் பஞ்சம் பிழைக்க வந்த பராரிகளின் கும்பல் அது.
குறிப்பிட்ட அந்தக் கூட்டத்துக்கு நேரும் உழைப்புச் சுரண்டலும்,அடிப்படை மனித உரிமை மீறல்களும்....அந்தச் சூழலையும் கடந்ததாய்  மானுட உணர்வுகள் இன்னும் கூட மரத்துப் போகாதபடி அதில் சஞ்சரிப்பவர்களுக்குள்  சம்பவிக்கும் மெல்லிய காதல்,ஆழ்ந்த நட்பு முதலிய உணர்வுகளுமே ‘அங்காடித் தெருவி’ன் அடிநாதங்கள்.

இவை தவிர இன்னும் சில குவியல்களும் கூடப் படத்தில் பதிவு செய்யப்படுகின்றன.

மிதமிஞ்சிய பொருள் நுகர்ச்சியால் எஞ்சும் அளவு மீறிய குப்பை கூளங்கள்.
படத்தின் முதல் காட்சிதொடங்கி இறுதி வரை அவற்றின் நெடி அடித்துக் கொண்டே இருக்கிறது. அவற்றையும் கூட ஜீவனத்துக்கு முதலாக்கும் சாமானியஜனங்கள்..!
 குப்பை பொறுக்கியும், குப்பைகளில் அரிதாய்க் கிடைக்கும் ஓரளவு நல்ல துணிகளைப் புதியதாக்கியும், பாழடைந்த கழிப்பறையைக் கட்டணக் கழிப்பறையாக்கியும் எப்படியோ பிழைப்பு நடத்தும் மனிதர்கள் !
(எப்படியும் பிழைத்துக் கொள்ளும் அந்தவகை உத்திகள்தான் கதையின் நாயக நாயகிக்கு நம்பிக்கையளித்து,  வாழ்ந்துவிடமுடியும் என்ற உத்வேகத்தை இறுதியில் அளிப்பவை.
‘’விக்கத் தெரிஞ்சவன் வாழத் தெரிஞ்சவன்’’என்கிறார் வசன நெசவுசெய்த ஜெயமோகன்)

வளரிளம் பருவத்தில் வறுமையால் பெருவணிக அங்காடிகளில் வேலைக்குச் சேர்ந்து...உடலின் சக்தி ஒட்டுமொத்தமாகப் பிழிந்தெடுக்கப்பட்டபின் குப்பையாகவே மாறித் தெருவில் வீழ்ந்து கிடக்கும் வேறு சில மனித மாதிரிகள்!

பல்பொருள் அங்காடிகளின் தினசரி ஓட்ட கோரப் பற்சக்கரங்களுக்கடியே  சிக்கிச் சிதறுண்டு கூழாய்ப் போகும் விற்பனைப் பையன்களுக்கும்,பெண்களுக்கும் வாய்த்திருக்கும் 
இரண்டு வதைக்கூடங்களை நெஞ்சைச் சுடும் குரூர யதார்த்தமாக முன் வைத்திருப்பதே இத் திரைப்படத்தின் தனிப்பட்டுச் சொல்லத்தக்க பங்களிப்பு. ஒரு வதைக்கூடம், அவர்களின் பணியிடம். அது அவர்களைக் கசக்கிப் பிழிவதோடு ...... அவர்கள் சோர்ந்து போகும் வேளைகளில் கங்காணிகளாக நியமிக்கப்பட்டிருக்கும் மேற்பார்வைக் கருங்காலிகளால் கொடூரக் கசையடிகளுக்கும் ஆட்படுத்துகிறது.
ஒவ்வொரு தளத்திலும் அதற்கென்றே உள்ள திரையிட்ட தடுப்பு.
அந்தத் திரை மறைவில் ஆண் தொழிலாளர்கள் அறை வாங்குகிறார்கள் ;
விற்பனைப் பெண்களோ பெண் என்ற அடையாளத்தாலேயே மானக் கேடான பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆட்படுகிறார்கள்.
( வாடிக்கையாளரின் குறிப்பிட்ட ஒரு ரசனையைத் திருப்திப்படுத்த மேல்மாடியிலுள்ள சரக்கறை வரையில் பல முறை அலுக்காமல் ஓட வேண்டிய நிலையிலுள்ள சிறுவர்களைப் பார்த்த பிறகு ...அந்தக் காட்சியைக் கண்ட பிறகு  எந்தக் கடைக்குள் நுழைந்தாலும் இருப்பதில் ஒன்றை எடுத்துக் கொண்டு விரைவாக நடையைக் கட்டிவிட வேண்டுமென்ற எண்ணம் மனச்சாட்சி உள்ள எவருக்கும் தோன்றாமலிருக்க முடியாது.)
அடுத்த வதைக்கூடம் , வறட்சியான கிராமங்களிலே இருந்து மந்தைகளாகக் கொண்டு வந்து கொட்டப்பட்டிருக்கும் பணியாட்களின் தங்குமிடம்.
ஹிட்லரின் ‘
கான்ஸண்ட்ரேஷன் கேம்ப்’பைநினைவூட்டும் அடைசலும் நெரிசலுமான பொதுக்கூடங்கள்,அடுத்தவரின் எச்சில் தட்டைக்கழுவக்கூட முடியாமல் அவசர கதியில் உணவை அள்ளிவிழுங்கும் சாப்பாட்டுக் கூடங்கள். இந்த இரு வதைக் கூடங்களை மட்டுமே சார்ந்து...அவற்றை மட்டுமே  நம்பியதாய் மனித வாழ்வு முடங்கிப் போய்விடக் கூடாது என்ற நம்பிக்கை ஒளியை விதைத்திருப்பதே இப் படத்தின் உச்ச கட்ட உணர்த்தல்.

‘யானை வாழும் காட்டிலேதான் எறும்பும் வாழ்கிறது’ என்ற ஜெயமோகனின் வசனம் அங்காடித் தெருவின் முழுமையான சாரத்தையும் உள் பொதிந்திருக்கிறது.

கண் பார்வையற்ற நிலையிலும் தெருவோரமாய்ச் சிறு சிறு பொருட்களை விற்றுப் பிழைக்கும்
முதியவரில் தொடங்கி வாழ்வதற்கான பல வழிகளை ஒரு வகுப்பறைப் பாடம் போலப் போதிக்கும் அந்தத் தெருவே இந்தப் படத்தின் மையப் பாத்திரமுமாகிறது.

அந்தப் புரிதலும் தெளிதலும் இன்றி அடுத்தவரின் அடக்குமுறைக்கு ஆட்பட்டுக் கிடக்கும் அடிமைத் தளையிலிருந்து தங்களை விடுவித்துக் கொண்டு சில அவலச் சம்பவங்களுக்குப் பிறகு, சுதந்திரமான சிறு வணிகர்களாகக் கதை மாந்தர்கள் மாற்றம் பெறுகிறார்கள்.

வாழ்வதற்கான உரத்தைச் சாமானியர்கள்  பெறும்போது அவர்கள் வாழ்வில் நிகழும் அவல நிகழ்வுகளை  நாடகத் தன்மையானவை  என்று புறந்தள்ளிவிடமுடியாதபடி இயல்பான யதார்த்த நிகழ்வுகளாகவே அவை  படத்தில் சித்தரிக்கப்பட்டிருக்கின்றன.

வழக்கமான ஒரு காதல் கதைக்கு வித்தியாசமானதொரு பின்புலம்  என்று சில விமரிசனங்கள் இப் படம் பற்றிக் குறிப்பிட்டாலும்  அதை அவ்வாறு கொள்ள முடியாதென்றே சொல்லத் தோன்றுகிறது.
காதலை...நெகிழ்ச்சியை..நட்பை உணரும் பருவத்தில்  குடும்ப உறவுகளிலிருந்து வெகுதூரம் அந்நியப்பட்டுப் போய் -ஆணும் பெண்ணும் அடுத்தடுத்துப் பணியாற்ற வேண்டிய வேலைச் சூழலில் ஒருவருக்கொருவர் ஆதுரமாய் ஆதரவாய் இருப்பதும் அவர்களிடையே காதல் முகிழ்ப்பதும் கதைக் கருவை ஒட்டியதாகவே அமைந்திருக்கிறது.
சொல்லப் போனால் அனல் காற்று வீசும் அந்தச் சூழலில் காதல் ஒரு மெல்லிய பூங்காற்றாய் அந்த இளைஞர்களைத் தழுவி ஆர அணைத்தபடி ஆறுதல் தருகிறதென்றுகூடக் கூறலாம்.

மொத்தத்தில் இதுவரை சொல்லப்படாத களம் ..... !
முறைப்படுத்தப்படாத தொழிற்களத்தை வரித்துக் கொண்டிருக்கும் பேசப்படாத மனிதர்கள் !
சமூக மனச்சாட்சியை ஆழத்திலிருந்து அகழ்ந்தெடுத்துப் பிடரி பிடித்து உலுக்குகிறது அங்காடித் தெரு.
பின் குறிப்பு;
புது தில்லியின் சூழலில் புதிய தமிழ்ப்படங்களை சட்டத்துக்குப் புறம்பான...தரம் குறைவான சி.டிக்களில் மட்டுமே பொதுவாகப் பார்க்க முடியும்.
இம்முறை ‘அங்காடித் தெரு’ வெளிவந்த ஒரு சில வாரங்களிலேயே - சித்திரைத் திருநாளன்று - தில்லித் தமிழ்ச்சங்கம் அதைத் திரையிட்டுவிட்டதால் இத்தனை தரமான ஒரு படத்தைத் தெளிவான முறையில் பார்த்து விமரிசனம் எழுதுவது சாத்தியப்பட்டிருக்கிறது.அதற்காகத் தில்லி தமிழ்ச்சங்கத்துக்கு ஒரு கை கூப்பு.

படத்தில் பணியாட்களுக்கு அறை விழும்போதெல்லாம் அரங்கில் சின்னச் சலசலப்பும்
’இது கொஞ்சம் ஓவர்’போன்ற வார்த்தைகளும் காதில் விழுந்து கொண்டே இருந்தன.
கும்பமேளாவுக்காக அப்போது வடக்கில் இருந்த படத்தின் வசனகர்த்தாவான எழுத்தாளர் திரு ஜெயமோகனோடு உடன் இது பற்றித் தொலைபேசியில் பகிர்ந்தபோது அவர் சிரித்தபடி ‘’நிஜத்திலே இன்னும் அதிகமாவே அடிப்பாங்க’’என்றார் சுருக்கமாக.

சோகத்தின் கனம் தாங்காமல் அரங்கைவிட்டுப் பாதியில் வெளியேறிய கூட்டமும் உண்டு.
ஜிகினா சுற்றிய சினிமாவையே நாடுபவர்களும்,பிறர் துன்பத்தைத் தாங்க முடியாத பேரருளாளர்களாகப் பாவனை செய்தபடி - உண்மையில் தங்களை வருத்தப்படுத்திக் கொள்ள விரும்பாதவர்களுமே இப்படிப்பட்ட எதிர்வினை ஆற்றுபவர்கள்.
இந்தக் கூட்டத்தில் மேல்மட்ட கீழ்மட்ட பேதங்களோ - வர்க்க வேறுபாடுகளோ இருப்பதில்லை .
இவர்கள் ஒரு தனி வர்க்கம்...அவ்வளவுதான்.
இந்தப் போக்கு தில்லிக்கு மட்டும் உரியதென்றும் சொல்லி விடமுடியாது.
மதுரையில் பல்லாண்டுகள் வசித்தபோதும் இப்படிப்பட்ட கூட்டத்தைக் கண்ட அனுபவம் உண்டு.
பம்பாய் படத்தில் அரவிந்தசாமிக்குக் கல்யாணம் முடிந்தவுடனும்,சேது படத்தில் சேதுவுக்கு மன நிலைப் பிறழ்ச்சி ஏற்பட்டவுடனும்...அடுத்த நிமிடமே அரங்கைக் காலி செய்து விடுபவர்கள் இவர்கள்.
இப்படிப்பட்ட பார்வையாளர்களே மிகுதியாக உள்ள தமிழ்ச் சூழலில்
 
சுடும் உண்மைகளைத் துணிவாக முன் வைத்துக் குத்துப்பாட்டு..இரட்டை அர்த்தம்...அரிவாள்வீச்சு..தெருச்சண்டை தவிர்த்த நல்லதொரு யதார்த்தப் படமாக ‘அங்காடித் தெரு’வை உருவாக்கித் தமிழ்ப் படங்களின் தரம் ஓரளவேனும் உயர உதவியிருக்கும் படக் குழுவினருக்கு



அங்காடித் தெருவின் கண்ணுக்குப் புலப்படாத உலகம் - மோனிகா
மிடில் சினிமா என்ற ஒரு மரபு சமீபத்தில் உருவாகியுள்ள ஒன்று. அழகியில் ஆரம்பித்து காதல், பருத்திவீரன், சுப்பிரமணியபுரம், பூ, பள்ளிக்கூடம், நாடோடிகள் என தமிழ் சினிமாவின் பரப்பில் விரிந்துள்ள இந்த ஒரு சுகாதார சினிமா மரபு வழமையான அதன் பல விஷயங்களை மிகவும் நாசூக்காகவும் அழகாகவும் ஓரங்கட்டியுள்ளது.

வழமையான படங்களின் வாய்ப்பாடு:

நாயகன் மையப்பட்ட சினிமா கருத்தாக்கம் – சண்டைக்காட்சி மற்றும் பன்ச் வசனம். இதற்கு ஏற்கனவே சினிமாவில் காலூன்றிப்போன நடிகர்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட முடியும்.
நகரத்தையும் நாகரிகத்தையும் இணைத்துப் (அறுபதுகள் முதல்) பேசக்கூடிய கருத்தாக்கங்கள். கிராமத்தைவிட நகரத்தில் வாழ்வாதாரங்கள் அதிகம் எனவும், படித்த மேல்தட்டு மக்கள் x பாமர அடித்தட்டு (சென்னை பாஷையை பேசிக்கொண்டு) கொண்ட கலவை மட்டுமே நகரம் என்ற தோற்றத்தை அளிக்கக் கூடிய படங்கள்.
கிராமத்துப் பெண்களை வெள்ளை உடை தரித்த தேவதைகளாகவும், நகரப் பெண்களை ஹீரோவை முதலில் மடியவைத்து பிறகு அவனிடம் மடிந்துபோகும் அடங்காபிடாரிகள் என்ற ரீதியிலான கதைக்கருக்கள்.
காதல் காட்சியுடன் தொடர்புள்ள பாடல்களை ஐரோப்பிய/ வெளிநாட்டு மண்ணில் போய் படம் பிடித்து காட்டுதல்
இப்படங்களிலிருந்து மாறுபட்டு உலகமயமாதலின் ஒரு உற்பத்தியான “ஷாப்பிங் மால்ஸ்” எனப்படும் பெருந்தன மளிகை/ஜவுளிக்கடைகளின் குளிர்சாதன உலகிற்குள் உள்ள ஒரு இரத்தவாடையெடுக்கும் வன்முறை உலகை வெளிச்சம் போட்டிக் காட்டிய சாதனை அங்காடி தெருவின் சாதனை. நீங்களும் நானும் இல்லை நம்மைச் சுற்றி உள்ளவர்கள் நடுத்தர வர்க்கத்தினர் எனப் பலரும் இக்கடைகளின்பால் ஈர்க்கப்பட்டவர்கள். அதே நேரம் அங்குள்ள பொருட்கள் நம் கண்களுக்குத் தெரியுமளவிற்கு அதன் ஊழியர்கள் நம் கண்களுக்குத் தெரிவதில்லை.

அருங்காட்சியகங்கள் முதல், வாகனங்கள், துரித உணவுக் கடைகள், அதி நவீன காப்பி கடைகள் என எல்லா அமைப்புகளையும் முதலாம் உலக நாடுகளின் கருத்தாக்கங்களின் அடிப்படையே கொண்டு பின் பற்றும் நாம் இவ்விரண்டிற்குமான வாழும் சூழலில் உள்ள இடைவெளியினை அறவே மறந்துவிடுகிறோம். கணினிப் புரட்சியினால் வானளாவி எழுந்துள்ள இந்நிறுவனங்களின் வளத்தில் கொழுத்துப் பெருகும் வாகனங்கள் செல்ல இடமின்றி நம் சாலைகளின் திக்கித் திணறிப் போகின்றன. கோயில், குளம், கடற்கரை, சடங்குகள், பூங்காக்கள்,கூட்டங்கள் என்ற இடங்களில் உற்றார் உறவினரைச் சந்தித்து வந்த நடுத்தர மேல்தட்டு சமூகம் இப்போது நகரத்தின் ஆங்காங்கே உயர்ந்து நிற்கும் வணிக வளாகங்களில் கூடுவதை நாகரிகமான ஒரு செயலாக்கிக் கருதுகிறது. மேலை நாடுகளில் வீடுகளை ஒரு தனிமைக்கான வெளியாகக் கருதுவதும் உணவகங்களின் நண்பர்களைச் சந்திப்பதும் அவர்களது நாகரிகத்தின் ஒரு பகுதி. அது விருந்தோம்பலுக்குப் பெயர்போன நமது மண்ணிலும் தலைகாட்டத் தொடங்கிவிட்டது. இத்தகைய வியாபார உத்திகளுக்கு நடுவே தமது வாழ்வாதாரங்களைத் தேடும் ஒரு மூன்றாம் நிலை குடிமக்களின் கூட்டம் இந்த அங்காடிகளின் குளிரிலுக்குள்ளேயும் கூட புழுங்கித் தவித்துக் கொண்டிருக்கிறது. ஞாநி (குமுதம்:7.4.2010) தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளதைப்போல தொழிற்சங்கங்கள் அமைப்பதற்கோ எதிர்ப்பு தெரிவிக்கவோ திராணி இல்லாதவர்களாக உள்ளனர் இவர்கள். மேலை நாடுகளைப் பின்பற்றி அமைப்புகளை உருவாக்கிச் சுகிக்கும் நமது நிறுவனங்கள் அங்குள்ளதுபோல தொழிலாளர் சமூக நலன்களை அளிக்க மறுக்கின்றன. அமெரிக்காவில் ஒரு கல்லூரி வாத்தியாரைக் காட்டிலும் ஒரு கட்டிடத் தொழிலாளியின் சம்பளம் அதிகம். தச்சுத் தொழிலாளர்களையும், உடல் ரீதியான உழைப்பில் ஈடுபடுபவர்களையும் நம் நாட்டினரைப்போல் அவர்கள் மிகவும் கீழ்த்தரமாகப் பார்ப்பதில்லை. வேலை நேரம், குறைந்த/அதிகபட்ச சம்பள வரம்புகள் போன்றவற்றில் திட்டவட்டமான நியதிகள் உள்ளன. உலகமயமாதலில் எல்லோரும் எல்லா பொருட்களையும் நோக்கி அலையவேண்டும். நீ ஒரு தேர்ந்த விவசாயியாக இருக்கலாம் என்றாலும் உன் உற்பத்திப் பொருளை ஏற்றுமதி செய்துவிட்டு நீ கேப்பைக் கூழ் குடிக்கவேண்டும். தையல்காரனாகிய நீ ஏற்றுமதியாளர்களுக்கு ஒரு நாளில் பனிரெண்டுமணிநேரம் கூலிக்காக தைத்துவிட்டு உனது சட்டையை ஏதாவது சூப்பர் மார்க்கெட்டில் வாங்கி அணிந்துகொள்ளவேண்டும். நீ எங்கே உணவருந்தவேண்டும்? எப்படிப்பட்ட உடையணிய வேண்டும்? உனது குழந்தைகளது பென்சில், பேனாக்களில் எத்தகைய கார்ட்டூன்கள் இடம்பெறவேண்டும்? உனது மனைவியின் நகப்பூச்சும் வாசனைத் திரவியமும் எந்த நிறுவனத்துடையதாக இருக்க வேண்டும்? இவை எல்லாவற்றையும் தீர்மானிக்கிற ஒரு வெளியை உன்னிடமிருந்து உறிஞ்சி உன் உள்மனத்தினுள் தனது தேர்வுகளைப் புகுத்த வல்லது இந்த உலகமயமாதல் என்ற வணிக உத்தி.

பாலியல் வன்முறையும் அதிகாரமும் இணைந்து செயல்படக் கூடிய வியாபாரச் சிறைகளை மிகவும் நாசூக்காக படம் பிடித்துக் காட்டியுள்ளது அங்காடித் தெரு. பருத்தி வீரன், சுப்பிரமணியபுரம் போன்ற படங்களில் யதார்த்தத்தை அழுத்தமாகக் காட்டுவதற்காக வன்முறையையும் ரத்தத்தையும் கோரமாகக் காட்டத் துணிந்த காமிராவிலிருந்து அங்காடித்தெருவின் காமிரா மிகவும் மாறுபட்டுவிட்டது என்று நாம் மகிழ்ந்து நிமிரும் முன்னர் இதிலும் கடைசிக் காட்சிகளில் அவசியமே இல்லாத ஒரு அவலம் சித்தரிக்கப்படுகிறது. கண்ணாடியணிந்து வரும் கடையின் மேற்காப்பாளர் எல்லா வணிக நிறுவனங்களின் முகங்களுக்கும் பொருந்தக் கூடிய நபர். காதலை வாழ்விற்காக தொலைத்துவிட்டு தொலைந்துபோகும் முதுகெலும்பில்லாத காதலர்களுக்கு நடுவே அராஜகம் செய்யும் முதலாளியை எதிர்த்து நிற்கும் இரு உழைப்பாளிகள் வாழ்ந்துவிடக்கூடாது என்பதில் படத்தின் யதார்த்தம் குறியாக இருப்பது மிகவும் வருத்தத்தைத் தருகிறது.

கனியாக நடிக்கும் அஞ்சலி கற்றது தமிழிலேயே நமது மனதைக் கவர்ந்தவர். இளம் வயதிலேயே தனது கிராமத்து வாழ்வினை நினைத்து மகிழ்ச்சியுறக்கூடியக் கூடியதாக உள்ளது காதலர்களின் வாழ்வு. வயதிற்கு வந்துவிடும் பெண்ணிடம் பார்ப்பனீயம் பேசும் கருணையில்லாத முதலாளிப் பெண்ணும் அதே நேரம் அவளை அணைக்கும் ஒரு சிறு தெய்வ வழிபாட்டுத் தளமும் சாதி அமைப்பையும் அப்படி நிலைகளில் பெண்களின் அவல நிலையையும் எடுத்துரைக்கும் ஒரு வெளிப்படையான கலகக் குரலை முன் வைக்கின்றன.

அடையாளம், அங்கீகாரம் போன்றவை மறுக்கப்பட்டு முகவரியில்லாதவர்களாக நகர நெரிசலில் தனது வாழ்க்கையைத் தொலைப்பவர்களில் ஒரு அங்கத்தினரை அங்காடித் தெரு தொட்டுக் காட்டுகிறது. இன்னும் இறங்க இறங்க இங்கே எத்தனையோ சாக்கடைகள் கிடைக்கலாம். ஆனால், இத்தனைக்குப் பிறகும் ரங்கநாதன் தெருவில் கூட்டம் குறையுமா?- என்பதுதான் நமது கேள்வி